Sunday, October 12, 2008

பிள்ளையார் சுழி

தஞ்சாவூர்க் கவிராயர் என்றொரு தனிச்சுற்றுக்கான காலாண்டிதழில் வெளி வந்த இரு கவிதைகள்.

பிள்ளையார் சுழி :
-------------------------

ஆற்றங்கரைப்
பிள்ளையாருக்கு
கிராமத்துப்
பெண்டுகள் மீது
கோபமோ கோபம்.
என்னை
வணங்காவிட்டாலும்
பரவாயில்லை
ஒரு ஆண்பிள்ளையாய்
நடத்தக்கூடாதா ?
குளித்துவிட்டு வந்து
ஈரப்புடவையை
என்பக்கம் திரும்பி நின்றா
மாற்றிக் கொள்வார்கள்.
சீச்சீ !

எச்சம் :
----------
சிலைகள் தோறும்
காக்கையின் எச்சம்.
வள்ளுவர் சொன்னது
சரி.
தக்கார் தகவிலர் என்பது
அவரவர்
எச்சத்தாற்
காணப்படும் !

நன்றி : தினமணி - தமிழ் மணி - 12.10.2008



Monday, February 18, 2008

பேசும் யானை

அன்புடன் குழுமத்தில், அன்பர் புகாரி அறிமுகப் படுத்திய, தமிழோவியத்தில் பிரசுரமான, ஜான்.பீ.பெனடிக்ட்டின் கவிதை ஒன்று இங்கே :
------------------------------------------------------------------------------------------
பெரிசா எங்களைப் படைச்சதால
பெரிய கோயிலில் நிறுத்திப்புட்டான்
பேச முடியா ஊன ஜாதியை
பிச்சை எடுக்கவும் பழக்கிப்புட்டான்

முழங் கையளவு குச்சியை வைச்சு
முட்டிக்கு முட்டி தட்டுறிய
மூனு மாசத்துக் கொருமுறை தான்
முதுகில தண்ணீ ஊத்துறிய

கால் நகர முடியாம
கட்டிப் போட்டு வாட்டுறிய
கட்டுக்கட்டா கரும்பு திங்கும்

கம்பீரக் கூட்டம் நாங்க
காய்ஞ்சு போன தட்டையை
கால் வயிற்றுக்குப் போடுறிய

என்னைப் பெத்த மவராசி
எந்தக் கோயில் வாசலிலோ
என் வயித்துல புள்ள பூச்சி
எந்தக் காலமோ தெரியலியே

சாமி பேரைச் சொல்லிச் செஞ்சா
சாகடிக்கிறதும் உங்களுக்குக் குத்தமில்லை
சதா காலம் சாவுறதை விட
சட்டுனு சுட்டுப்போடும் வீரப்பன் தேவலைங்க

வருஷத்துல ஒருமாசம் முதுமலை கேம்ப்
வாஸ்து பொலிட்டிசியன் போட்ட பிச்சை
வருஷம் முழுக்க காட்டுக்குள்ளே கூட்டமா
வாழ்வது தானே எங்க ஜனத்தின் ஆசை

வாய் பேச முடிஞ்சதால
வந்தேன் ஜார்ஜ் கோட்டைக்கு
வனத்துறை மந்திரியைப் பாத்து
வயிற்றெரிச்சலைக் கொட்டிப் போட
--------------------------------------------
நன்றி: தமிழோவியம்
நன்றி : அன்புடன் புகாரி

நன்றி : ஜான்.பீ.பெனடிக்ட்

Monday, January 7, 2008

இறைவன் துணைவனா ??

பாதச்சுவடுகள் அது ஒரு அற்புதமான கனவு....
தன்னந் தனியனாய் அக் கடற்கரை மணலில் வெகுதூரம் நடந்த பின் திரும்பிப் பார்த்தேன். எனது பாதச் சுவடுகள் மிக நீண்ட பாதை போட்டிருந்தன. ஜனன காலத்திலிருந்து நான் நடந்து வந்த பாதையது. எனது வாழ்க்கைச் சரிதம் அங்கம் விடாமல் மௌனக் காட்சியாய் அம்மணலில் தெரிந்தது.

ஓ! இதென்ன? எனது பாதச் சுவடுகளின் அருகில் யாருடையவை இம் மற்றொரு ஜோடி சுவடுகள்? உடனே எனக்குப் புரிந்தும் போயிற்று!புல்லரித்தது.... எனது தேவனின் சுவடுகள் அவை! என்னோடு இப்பயணத்தில் என் தெய்வமுமா உடன் வந்திருக்கிறது? நான் பாக்கியசாலி தான்.

ஆனால், ஆனால்..... நடுநடுவே ஏன் ஒரு ஜோடி மட்டும்? அதுவும் என் வாழ்க்கையின் மிகவும் சோதனையான காலங்களின் போது....எனக்கு ஏமாற்றம் தாங்கவில்லை. தேவா, இவ்வளவு தான் உன் கருணையா? உன்னுதவிக்காக நான் கெஞ்சிக் கரைந்த போது கை விட்டு விட்டாயே என்னை - கூக்குரலிட்டேன் நான்.

அசரிரீயாக பதில் கேட்டது- அந்த ஒற்றை ஜோடிச் சுவடுகள் உன்னுடையவை அல்ல நண்பா, என்னுடையவை. நடக்கவியலாத உன்னை நான் சுமந்து வந்த சுவடுகள்!.


N.Ganeshan - இணையத்தில் தமிழ் வலைப்பூவில் இருந்து
http://enganeshan.blogspot.com/

இது அவர் படித்ததில் அவருக்குப் பிடித்தது
அதை நான் படித்ததில் எனக்குப் பிடித்தது